மேற்கு வங்க அமைச்சரான ஜோதி பிரியா மல்லிக்கை ரேஷன் விநியோக முறைகேடு வழக்கு மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க அமைச்சர் ஜோதி பிரியா மல்லிக்கிடம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக 18 மணி நேரம் விசாரணை நிறைவடைந்த நிலையில் அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் புறநகரில் உள்ள சால்ட் லேக் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து விசாரணை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோர உள்ளது. கைது செய்யப்பட்ட அமைச்சர் ஜோதி பிரியா மல்லிக்கை நீரிழிவு நோய் மற்றும் பல உடல் உபாதைகளால் அவதிப்படுவதால் நகரின் தெற்குப் பகுதியில் உள்ள ஜோகாவில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து கருத்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ஜோதி பிரியா மல்லிக், “மிகப்பெரிய சதியில் சிக்கி நான் பலியாகிவிட்டேன். முன்னாள் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகியும், தற்போதைய பாஜக நிர்வாகியான சுவேந்துவின் சதிச்செயலே இவை” என குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்க அமைச்சர் ஜோதி பிரியா மல்லிக்கை வீட்டில் நடைபெற்ற சோதனையானது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.







