தமிழர்களின் நாகரீகம் மற்றும் பண்பாடு குறித்த அறியப்படாத பல்வேறு தகவல்கள் இன்னும் 6 மாத காலத்தில் வெளியாகுமென மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் குமரேசன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், சிவகளையில் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தமிழக தொல்லியல் துறை சார்பில் தொல்லியல் அகழாய்வு பணிகள் துவங்கின. இதுவரை 40 முதுமக்கள் தாழிகள், 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்வட்டங்கள், பிராமி எழுத்துக்கள் கண்டுப்பிடிக்க பட்டுள்ளன.
இதையடுத்து அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் உள்ள பொருட்களை எடுத்து மரபணு பரிசோதனை செய்வதற்காக மதுரை காமராசர் பல்கலைக்கழக மரபியல் துறை பேராசிரியர் குமரேசன் மற்றும் அவரது குழுவினர் வருகை தந்தனர்.
இதனையடுத்து பரிசோதனைக்கான மண் மற்றும் எலும்புகளை பெற்றுக் கொண்ட குமரேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இரண்டாம் கட்டமாக நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் கிடைத்த பொருட்கள் ஆய்வுக்கூடத்தில் வைத்து ஆய்வு செய்யப்படும் என்றும் இந்த பணிகள் சுமார் 6 மாத காலத்தில் நிறைவடையும் என்றும் தெரிவித்தார்.







