உயர் கல்விக்காக 10 லட்சம் ரூபாய் வரை கடனாகப் பெற மாணவர் கிரெடிட் கார்டு திட்டத்தை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிமுகம் செய்துள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி, கடந்த சட்டசபைத் தேர்தலின் போது, மாணவர்களின் உயர் கல்விக்காக கிரெடிட் கார்டு வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில், மாணவர் கிரெடிட் கார்டு திட்டத்துக்குக் கடந்த வாரம் அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், இந்தத் திட்டத்தை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய மம்தா பானர்ஜி, மேற்கு வங்க அரசு சார்பில் இந்தத் திட்டத்தை அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன். மாநில இளைஞர்கள் சுயசார்பு உடையவர்களாக முன்னேற வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.இந்தக் கடனை இந்தியா அல்லது வெளிநாடுகளில் படிக்கும் இளங்கலை, முதுகலை, பி.ஹெச்டி ஆராய்ச்சி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் 10 ஆண்டுகளாக வசிப்பவர்கள் மற்றும் 40 வயதுக்குக் குறைவானவர்கள் தங்களின் உயர் கல்வியைத் தொடங்க, இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இதன்படி மாணவர்கள் ரூ.10 லட்சம் வரை பணம் கடனாகப் பெறலாம். இந்தத் தொகைக்கு மிகவும் குறைந்த ஆண்டு வட்டியே வசூலிக்கப்படும். 15 ஆண்டுகள் வரை பணத்தைத் திரும்பச் செலுத்துவதற்கான கால அவகாசம் கொடுக்கப்படும் என்றும் மமதா பானர்ஜி தெரிவித்தார். இத்திட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.







