மதுரை அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோயிலில் ஆடித் திருவிழா திருத்தேரோட்டம் தொடங்கியது, கள்ளழகர் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் சமேதராக தேரில் பவனி வருகிறார்.
அழகர் மலை கள்ளழகர் கோவிலில் ஆடித்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஆடி பிரம்மோற்சவ தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அழகர் கோவிலில் கொரோனா தொற்று காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக ஆடித்திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில் இந்த ஆண்டு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
கள்ளழகர் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் சமேதராக தேரில் பவனி வருகிறார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். மதுரை அழகர்கோவில் கள்ளழகர் ஆடிபெருந்திருவிழா கடந்த 4 ஆம் தேதி ஆலயத்தில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 10 நாட்கள் ஆலயத்தில் விழா நடைபெறும் நிலையில் ஒவ்வொரு நாளும், தங்க பல்லக்கில் எழுந்தருளி, அன்னம், கெருடவாகனம், சேஷ வாகனம், யானை, குதிரை என பல்வேறு வாகனங்களில் கள்ளழகர் எழுந்தருளி அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை 6 மணிக்குத் தொடங்கியது. கோவிந்தா! கோஷம் முழங்கப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரின் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். 4 மாட தேரடி வீதிகள் வழியாகத் திருத்தேரில் கள்ளழகர் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பவனி வருகின்றார். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சித்திரைத் திருவிழா போன்றே ஆடித் திருவிழாவும் அழகர்கோவிலில் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோயிலில் ஆடித் திருவிழா திருத்தேரோட்டத்தை நேரலையில் பார்க்க: https://youtu.be/Tqb08Tkt-iA








