36 மாதங்களுக்குள் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவாக கட்டி முடிக்கக்கோரி மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு தீர்ப்பு வழங்கியது.
அப்போது, தமிழ்நாட்டோடு எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என அறிவிக்கப்பட்ட பிற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் ஏறத்தாழ முடியும் நிலையில் உள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
தமிழ்நாட்டில் கட்டுமான பணிகள் அவ்வளவு துரிதமாக நடைபெற்றதாக தெரியவில்லை என கூறிய நீதிபதிகள், மனுதாரர் ஒவ்வொரு நகர்வுக்கும் நீதிமன்றத்தை நாடியே உத்தரவு பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.
எனவே, நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்காமல், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை துரிதப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த உத்தரவு கிடைக்கப்பெற்ற 36 மாதங்களுக்குள் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்று நீதிமன்றம் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.








