மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள மூலகொத்தளம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து சென்னை தண்டையார்பேட்டை கோதண்டராமன் தெருவில் உள்ள இல்லத்தில் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது. காலை முதல் ஏராளமான அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மதுசூதனன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் மதுசூதனன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். இதே போல சசிகலாவும், மதுசூதனன் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு இன்று மதியம் அவரது உடல் திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியே ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. மூலக்கொத்தளம் மயானத்தில் மதுசூதனன் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது.








