பிரதமர் மோடி தலைமையில் பிரிக்ஸ் நாடுகளின் மாநாடு, அடுத்த மாதம் 9-ம் தேதி காணொலியில் நடைபெற உள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் மாநாடு, இந்தியா சார்பில் மூன்றாவது முறையாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஸீ ஜின்பிங் உட்பட பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். கிழக்கு லடாக் பகுதியில், இந்தியா – சீனா இடையே மோதல் போக்கு அதிகரித்த நிலையில், முதல்முறையாக இந்திய பிரதமரும் சீன அதிபரும் காணொலி மாநாட்டில் ஒன்றாக பங்கேற்க உள்ளனர். இதில், கொரோனா தடுப்பு, பொருளாதார விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக வரும் 24-ம் தேதி பிரிக்ஸ் நாடுகளின், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் மாநாடும், 27-ம் தேதி வேளாண் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர்களின் மாநாடும் நடைபெறும், என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, கடந்தாண்டும் பிரிக்ஸ் மாநாடு காணொலியில், ரஷ்யா தலைமையில் நடைபெற்றது.







