மதுராந்தகம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, பல்லாவரம் பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்த பத்து பேர் திருவண்ணாமலை கோயிலுக்கு வேன் மூலம் சென்று வீடு திரும்புகையில், அவர்கள் வந்த வாகனம் இன்று அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், ஜானகிபுரம் கிராமம் அருகே வந்துகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சந்திரசேகர், சசிகுமார், தாமோதரன், ஏழுமலை, கோகுல் மற்றும் சேகர் ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து இந்த விபத்தில் பலியான நபர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுராந்தகத்தில் நிகழ்ந்த இந்த விபத்து செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும் இச்செய்தியை அறிந்தவுடன், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனை சம்பவ இடத்திற்குச் சென்று, உரிய உதவிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியதாவும், இவ்விபத்தில் காயமுற்று செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 4 நபர்களுக்கு, சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இச்சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.







