உசிலம்பட்டியில் உள்ள அம்மா உணவகத்தில் உணவுகள் தரமாக இல்லை என குற்றம் சாட்டிய உசிலம்பட்டி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், தரமான உணவுகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
மதுரை உசிலம்பட்டி அலுவலகத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நகராட்சி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உசிலம்பட்டி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன், பல்வேறு கோரிக்கைகளை கூட்டத்தில் முன் வைத்தார். கூட்ட முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
உசிலம்பட்டி நகர் பகுதியை விரிவாக்கம் செய்யவும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியும் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் உணவுகள் தரமற்ற முறையில் உள்ளதாக குற்றம் சாட்டினார். ஆயிரக்கணக்கான கூலி தொழிலாளிகள் தினசரி வந்து சாப்பிட்டு விட்டு செல்லும் அம்மா உணவகத்தில் உணவு தரமாக இருக்க வேண்டியும், புதிய பேருந்து நிலைய கட்டமைப்பு பணிகளை விரைவில் துவங்கி புதிய பேருந்து நிலையத்தை கட்ட நடவடிக்கைகள் எடுக்க கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
![](https://i0.wp.com/news7tamil.live/wp-content/uploads/2023/07/postcard-1-2023-07-01T155428.079.jpg?resize=1400%2C787&ssl=1)
தொடர்ந்து, உசிலம்பட்டி நகராட்சிக் கூட்டுக் குடிநீர் திட்டம் திறக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகியும், தற்போது வரை உசிலம்பட்டி பகுதிக்கு தண்ணீர் வழங்கவில்லை எனவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 73 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்ட திட்டம், தற்போது சோதனை ஓட்டம் மட்டுமே நடைபெற்று வருவதால், அதை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு தண்ணீரை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளதாக பேட்டியளித்தார்.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.