மு.க.முத்து மறைவு – எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

மு.க.முத்து மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார். கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும், நடிகருமான மு.க.முத்து (77) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மு.க.முத்துவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மறைந்த மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நல குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

அன்பு சகோதரர் மு.க.முத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்து உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.