திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காதலியின் கண் முன்னே காதலன் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புதுப்பட்டி கைபைபுரத்தை சேர்ந்தவர் சேதுராஜன். இவரது மகன் பாரதிராஜா (வயது 21). கேட்டரிங் படித்துவிட்டு சிறுமலையில் உள்ள தனியார் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நத்தம் – மதுரை சாலையில் உள்ள மூங்கில்பட்டி முல்லை நகரை சேர்ந்த ராசு என்பவருன் மகள் பரமேஸ்வரியை (வயது 20) கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரின் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டாருக்கு தெரியவந்தது. இதையடுத்து பரமேஸ்வரியை அவரது பெற்றோர்கள் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
இதை தனது காதலன் பாரதிராஜாவிற்கு பரமேஸ்வரி தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து காதலன் பாரதிராஜா மூங்கில்பட்டி முல்லை நகர் பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் தனது நண்பர்களுடன் நேற்று இரவு சென்றுள்ளார். அங்கு பரமேஸ்வரியை தொடர்புகொண்டு வீட்டை விட்டு வரச் சொல்லி இருவரும் இருசக்கர வாகனத்தில் காதலனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதையறிந்த பரமேஸ்வரியின் பெற்றோர், மற்றும் அண்ணன் மலைச்சாமி மற்றும் உறவினர்கள், பாரதிராஜாவின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளனர்.
அப்போது ஆத்திரமடைந்த பரமேஸ்வரியின் சகோதரன் மலைச்சாமி அருகில் இருந்த கல்லை எடுத்து பாரதிராஜாவை தாக்கியுள்ளார். இதில் உயிருக்கு போராடிய பாரதிராஜாவை அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பாரதிராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் பாரதிராஜாவின் உடலை மீட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் காதலியின் பெற்றோர்கள், அண்ணன் மலைச்சாமி மற்றும் உறவினரை மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன், நத்தம் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி ஆகியோர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலியின் கண் முன்னே காதலன் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு, அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.







