ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் லாரியும், மினி லாரியும் மோதிகொண்ட விபத்தில், மினி லாரியில் இருந்த ரூ.7 கோடி பணம் சாலையில் சிதறியதால் பரபரப்பு நிலவியது.
இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதனையடுத்து நான்காம் கட்ட வாக்குப்பதிவு மே. 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் ஆந்திராவின் 25 தொகுதிகளுக்கும், தெலங்கானாவின் 17 தொகுதிகளுக்கும் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்றுடன் அங்கு தேர்தல் பிரச்சாரமும் ஓய்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து பணப் பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இன்று காலை ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நல்லஜார்லா அருகே சென்றுகொண்டிருந்த லாரி மீது மினி லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மினி லாரியில் இருந்த லட்சக்கணக்கான பணங்கள் கீழே சிதறியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாலையில் சிதறிய ரூ.7 கோடி பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து விபத்தில் காயமடைந்த மினி லாரி ஓட்டுநரை கோபாலபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து இப்பணம் எங்கிருந்து வந்தது, மக்களுக்கு கொடுக்க எடுத்து செல்லப்பட்டதா என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.