புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் கடந்த 7 ஆம் தேதி முதல், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. மதுக்கடை உட்பட அனைத்து கடைகளையும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், இப்போது கூடுதல் தளர்வுகளுடன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுக் கடைகள் உட்பட அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. கடற்கரை சாலை, பூங்காக்கள் காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை நடைப் பயிற்சி மேற்கொள்பவர்களுக்காக திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 100 நபர்கள் வரை பங்கேற்கலாம் என்றும் இறுதிச் சடங்குகளில் 20 நபர்கள் வரை மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகளுக்கு 100 நபர்களுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஐந்து நாட்களுக்குள் அனைத்து கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது, மீறினால் நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.







