சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க ஒருங்கிணைந்து செயல்படுவோம் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் 74வது குடியரசு தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அந்தந்த மாநிலங்களில் ஆளுநர்கள் கொடியேற்றி மரியாதை செலுத்தினர். சென்னை காமராஜர் சாலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். மேலும் முப்படைகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தலைநகர் டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தவுள்ளார். தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பையும் குடியரசு தலைவர் பார்வையிடுவார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் எல்சிசி பங்கேற்கவுள்ளார்.
https://twitter.com/narendramodi/status/1618439079401783296
இந்நிலையில் குடியரசு தினத்தையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “குடியரசு தின வாழ்த்துகள். இந்தத் தருணம் சிறப்பானது. காரணம் நாடு விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில் நாம் இந்த குடியரசு தின விழாவைக் கொண்டாடுகிறோம்.
இத்தருணத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறி நமது தேச விடுதலைக்காகப் பாடுபட்ட சுதந்திர வீரர்களின் தேசத்திற்கான கனவை நினைவுக்குவோம். இந்தியர்கள் அனைவருக்கும் குடியரசு தின விழா வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.







