அன்னா ஹசாரே போன்றவர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் ராமச்சந்திர ஆதித்தனாரின் 88-வது பிறந்தநாள் விழாவிற்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், சேது சமுத்திரம் கால்வாய்க்கு தமிழன் கால்வாய் என்று பெயர் சூட்டி அதை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறியவர் சி.பா.ஆதித்தனார் என்றார். அவர் ஆற்றிய தொண்டு அவரது வாரிசுகளான ராமச்சந்திரஆதித்தனாரும் ஏற்று செயல்படுத்தி வந்ததார் என்றார்.
பீகாரில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் வரவேற்கத்தக்கது. நிதீஷ் குமார் லாலு பிரசாத் யாதவ் முடிவை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. சனாதான சக்திகளை முறியடிக்கும் ஒரு பெரிய முயற்சியை அனைத்து ஜனநாயக சக்திகளும் மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் நிதிஷ் குமாரின் குரலை எதிரொலிக்கும் வகையில் செயல்பட வேண்டும். சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம் ஜனநாயக சக்திகளை ஐக்கிய படுத்துவோம் என்ற நோக்கத்தில் செயலாற்ற வேண்டும். அதோடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஸ்ரீமதி விவகாரத்தில் ஏற்பட்ட வன்முறையில் அந்த வன்முறைக்கு தொடர்பில்லாத பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதை கண்டித்து ஆகஸ்ட் 13-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சியில் போராட்டம் நடைபெற இருக்கிறது.
5G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 2.8 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் ஊடகங்கள் இதைப் பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. இப்போது, அன்னா ஹசாரே போன்றவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த காலத்தில் ஊழலை ஒழிப்போம் என்று புறப்பட்ட ஜனநாயக சக்திகள் தற்போது வாய்மூடி மௌனியாக இருப்பது ஏன் என்று புரியவில்லை என அவர் கேள்வி எழுப்பினார்.
கள்ளக்குறிச்சியில் பெண் ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் தேசியக்கொடி ஏற்றுவதற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறி இருக்கிறார் என்று செய்தியாளர்கள்
எழுப்பிய கேள்விக்கு, இது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அந்தப் பெண்ணுக்கு தகுந்த பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும் என்றும் தொல்.திருமாவளவன் எம்.பி. கேட்டுக்கொண்டார்.
-இரா.நம்பிராஜன்








