சுதந்திர இந்தியா 75ஆவது ஆண்டை நிறைவு செய்து, 76-ஆவது ஆண்டு விழாவை நாளை கொண்டாடும் நிலையில், இந்திய மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகளைக் கடந்திருப்பது சாதாரணமான ஒன்றல்ல. இந்த நீண்ட பயணத்தில் பல மைல்கற்களைக் கடந்திருக்கிறோம். அனைத்துத் துறைகளிலும் முன்னேறியிருக்கிறோம், நிலவுக்கு விண்கலம் அனுப்பியிருக்கிறோம், போர்ப்படை அணிகளைத் தலைமையேற்று வழிநடத்தும் வீராங்கனைகளைக் கூட உருவாக்கியிருக்கிறோம். ஆனால், வறுமையை ஒழித்திருக்கிறோமா? அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறோமா? இந்த வினாக்களுக்கெல்லாம் இல்லை என்பது தான் பதில் என்றால், நாம் அடைந்த விடுதலையைக் கொண்டாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை அடைந்தது மற்றும் விடுதலை அல்ல. பொருளாதாரம், சமூகம் என எவையெல்லாம் மனிதர்களை அடிமைபடுத்துகின்றனவோ, அவை அனைத்திலும் சமநிலையை உருவாக்கி, அவற்றிலிருந்து மக்களுக்கு விடுதலை அளிப்பது தான் உண்மையான விடுதலை எனத் தெரிவித்துள்ள அவர், அனைத்திலும் சமநிலையை உருவாக்கி சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால், அதற்கான கருவி சமூகநீதி தான் எனக் கூறியுள்ளார்.
மேலும், அது தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், மிக மிகப் பின்தங்கிய நிலையில் உள்ள பாட்டாளி மக்களுக்குப் போராடிப் பெற்ற சமூகநீதி என்னும் கனியை அந்த மக்கள் அனுபவிப்பதற்கு முன்பாகவே சமூகநீதிக்கு எதிரான கூட்டம் சதி செய்து பிரித்துவிட்டது. பறிக்கப்பட்ட சமூகநீதியை மீண்டும் வென்றெடுக்கும் நாள் தான் உண்மையான விடுதலை நாளாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்த நாம், வறுமையிலிருந்தும் விடுதலை அடைய வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர், அனைவருக்கும் கவுரவமான வேலை, கண்ணியமான வாழ்க்கை, சமத்துவமான சமுதாயம், அடித்தட்டு மக்களுக்குச் சமூகநீதி, அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி ஆகியவை நிறைந்த சமத்துவ நாட்டை உருவாக்கக் கடுமையாக உழைப்பதற்கு இந்த விடுதலை நாளில் நாம் உறுதியேற்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.