திமுக அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சரை தூங்க விடுங்கள் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கிண்டலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாஜக என்ற ஒரு கட்சி தமிழகத்தில் இல்லை என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன அதே திமுக தலைவர் ஸ்டாலின் தற்பொழுது பாஜகவை எதிர்க்கட்சியாக அவரே நினைக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முதலமைச்சருக்கு இரண்டு விதமான பயம் வந்துள்ளது. முதலில் அவருடைய கட்சியில் யார் என்ன செய்வார்கள் என்றும், இரண்டாவது பயம் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி இவை இரண்டும் சேர்த்து அவரின் தூக்கத்தை கெடுப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.
1980ம் ஆண்டு இந்தி என்பது கட்டாயமாக காங்கிரஸ் கட்சி கொள்கை வைத்திருந்தார்கள். 2020ம் ஆண்டு பாஜக ஆட்சியில் தான் கமிட்டி அமைத்து மத்திய அரசு மூலம் இந்தி மொழிக் கொள்கை எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ந்தனர். இந்தி மொழியை முழுமையாக பயன்படுத்தும் மாநிலம் “A” பிரிவாகவும், பாதி அளவு பயன்படுத்தப்படும் மாநிலம் “B” பிரிவாகவும், முழுமையாக பயன்படுத்தாத மாநிங்கள் C பிரிவாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது என்றார்.
மேலும், அட்டவணை 8 இருக்க கூடிய மொழிகள் மட்டும் தான் இந்தியாவின் அதிகாரபூர்வமான மொழிகள். இந்தியாவில் எந்த தேர்வாக இருந்தாலும் அட்டவணை 8 இருப்பது போல தான் நடத்த வேண்டும். இல்லாத ஒரு பிரச்சனையை எடுத்து ஆளும் கட்சியின் மீது இருக்கக்கூடிய மதிப்பை கெடுத்துக் கொள்கிறார்கள்.
தமிழகத்தில் ஏதாவது ஒரு தேர்வாது ஹிந்தியில் எழுத வேண்டும் என்று கட்டாயமாக சொன்னால் அதை ஒருபோதும் தமிழக பாரத ஜனதா கட்சி ஏற்காது. திமுக மக்களுக்கு தேவையான அரசியலை செய்ய வேண்டும். தேவையில்லாத பொய்யான விஷயத்தை விட்டுவிட்டு மக்களுக்கு சாதகமாக ஆட்சி நடத்த வேண்டும்.
பிரதமரை பொறுத்தவரை எல்லா குரு பூஜைகளுக்கும் தமிழகத்திற்கு வர வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். அதிலும் குறிப்பாக வருகிற 30ம் தேதி தேவர் ஜெயந்தி என்பதால் அதற்கும் வருவதற்கு ஆசைதான். ஆனால் பிரதமர் வரும் நிகழ்ச்சிகளை இரண்டு மாதத்திற்கு முன்னதாகவே அறிவிக்கப்படும் 30ம் தேதி பிரதமர் சென்னை வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. பிரதமர் வருகை குறித்து தவறான செய்தி பரவி வருகிறது. அடுத்த ஆண்டு குரு ஜெயந்திக்கு இங்கு வருவதற்கு அவருக்கு பரிதுரை செய்கிறோம் என்று கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு எப்போதோ பாஜக தயாராகிவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வெற்றி பெற வைக்கவும் மக்கள் தயாராகி விட்டார்கள். அதனுடைய தாக்கம் தான் முதலமைச்சர் தற்போது உளறிக் கொண்டிருப்பது. முதலமைச்சர் சொன்னது மாதிரி திமுகவின் முதல் எதிரி பாஜக தான். அதேபோன்று பாஜகவின் முதல் எதிரி திமுக தான் என்று குறிப்பிட்டார்.
திமுக அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதன்மை வேண்டுகோள் முதலில் உங்கள் முதல்வரை உறங்க விடுங்கள். பாரத ஜனதா கட்சி வளரும் போது முதல்வரின் தூக்கம் இன்னும் கெடும். அதனால் தான் சொல்கிறேன் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வரை தூங்குவதற்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கூறினார்.