உதகை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தாக்கிய சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அரக்காடு பகுதியில் கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வந்த வட மாநில கூலி தொழிலாளி கிஷாந்த் என்பவரின் நான்கு வயது மகள் சாரிதா சக குழந்தைகளுடன் தேயிலை தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்தார். தீடிரென அங்கு இருந்து வெளியேறிய சிறுத்தை சரிதாவின் கழுத்து பகுதியில் கவ்வியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் கிராம பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தன. அதனையடுத்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க கடந்த எழு நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் சார்பில் தேயிலை தோட்டங்களில் 15 க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் வனத்துறையினர் நேற்று தானியங்கி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது குடியிருப்பின் அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகி இருந்தது. இதனையடுத்து சிறுத்தையின் நடமாட்டத்தை உறுதி செய்த வனத்துறையினர் மாவட்ட வன அலுவலர் சச்சின் போஸ்லே தூக்காராம் உத்தரவின் பேரில் உதகை வனச்சரகர் ரமேஷ் தலைமையில் கிராமப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் இரண்டு கூண்டுகளை வைத்தும், பத்துக்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் உதவியுடன் சிறுத்தை பிடிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதனால் கிராம மக்கள் இரவு நேரங்களில் குடியிருப்பை விட்டு வெளியேற வேண்டாம் எனவும்,தேயிலை தோட்டங்களில் தனியாக பணிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.