தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலம் பெற தலைவர்கள் பிரார்த்தனை

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை அவர் கடந்த சில ஆண்டுகளாகத் தவிர்த்து வருகிறார். கட்சி தொடர்பான பணிகளிலும் அவர் பெரிதாக ஈடுபடுவதில்லை. அவருடைய குடும்பத்தினரே கட்சிப் பணிகளைக் கவனித்து…

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை அவர் கடந்த சில ஆண்டுகளாகத் தவிர்த்து வருகிறார்.

கட்சி தொடர்பான பணிகளிலும் அவர் பெரிதாக ஈடுபடுவதில்லை. அவருடைய குடும்பத்தினரே கட்சிப் பணிகளைக் கவனித்து வருகின்றனர். ஜூன் 14ஆம் தேதி விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்த வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தேமுதிக சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவுப் பிரச்சினையால் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் நலமுடன் இருக்கிறார். மேலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து விஜயகாந்த்துக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாள்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார். மேலும், அவரது உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் பொய்யான வதந்திகளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நம்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முழு உடல்நலம் பெற வாழ்த்தி வருகின்றனர். நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ள ட்விட்டர் பதிவில், “தேமுதிகவின் நிறுவனத்தலைவர் ஐயா விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைப்பாட்டால் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிற செய்தியறிந்தேன். அவர் முழு உடல்நலம் பெற்று வீடுதிரும்ப, எனது உளப்பூர்வமான விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்!” எனத் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/SeemanOfficial/status/1539279302855782400?t=syLTLSGw3Y1RGCdBD4ggCw&s=08

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ள ட்விட்டர் பதிவில், “உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் எனது இனிய நண்பரும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் இல்லம் திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/OfficeOfOPS/status/1539283191659634689

https://twitter.com/EPSTamilNadu/status/1539287005019791360

வி கே சசிகலா தெரிவித்துள்ள ட்விட்டர் பதிவில், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் உடல் நலம் குறித்து, அவரின் மனைவி பிரேமலதா அவர்களிடம் தொலைப்பேசியில் கேட்டறிந்தேன். சகோதரர் விஜயகாந்த் அவர்கள் பூரணமாகக் குணமடைந்து விரைவில் வீடு திரும்பி, மீண்டும் பொது வாழ்க்கையில் ஈடுபட எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/AmmavinVazhi/status/1539255624298549249?t=pKKCzyW5eq8-1ofgU-xVYQ&s=08

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.