திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதாளத்திற்கு சென்றுள்ளது – எடப்பாடி பழனிசாமி…!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதாளத்திற்கு சென்றுள்ளதாக அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி  எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 

“தமிழ்நாட்டில் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதாளத்திற்கு சென்றிருப்பதை கடந்த 24 மணி நேரத்தில் வந்த செய்திகளே தெளிவாக உணர்த்துகின்றன.

●கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பள்ளி மாணவர்கள் இடையேயான மோதலில் தாக்கப்பட்ட +2 மாணவர் பரிதாபாமாக உயிரிழப்பு,

●மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் எடை தராசால் அடித்து காய்கறி கடைக்காரர் கொலை,

●தென்காசியில் சொத்து தகராறில் விவசாயி வெட்டிப் படுகொலை,

●சேலம் தோப்பூர் பகுதியில் தலை துண்டித்து கொல்லப்பட்ட இளைஞரின் தலையை தேடும் போலீசார்,

●நாகர்கோவிலில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை வழிமறித்து திருட முயற்சி, என தொடர்ச்சியாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

பள்ளி மாணவர்கள் இடையே படிப்பு தான் வளர வேண்டும். ஆனால், ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை போக்கு தான் அதிகரித்து வருகிறது. கொலை வரை நீண்டுள்ள இந்த மோதல் வெறியை கட்டுப்படுத்தத் தவறியதற்கு பொம்மை முதல்வரின் அரசு வெட்கப்பட வேண்டும். விவசாயி, வியாபாரி, பெண், இளைஞர் என யாருக்குமே பகல், இரவென எந்த நேரத்திலும் துளி கூட பாதுகாப்பு இல்லாத ஒரு அவலத்தின் மொத்த உருவான ஆட்சியைத் தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நடத்தி வருகிறார். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதால் தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் சீர்கெட்டு உள்ளது.

சுய விளம்பரத்தில் திளைக்கும் பொம்மை முதல்வர் இதை எப்போது தான் உணரப் போகிறாரோ? ஆட்சியில் இருக்கப் போகும் நான்கு மாதங்களிலாவது சட்டம் ஒழுங்கின் மீது கவனம் செலுத்துமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.