கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு 187 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாக்பூரில் நடந்த மழை பாதிப்புக்குள்ளான 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஆரோன் பின்ச் மற்றும் கேமரூன் கிரீன் களமிறங்கினர். அணியின் கேப்டனான பின்ச் நிதானமாக விளையாட, மறுபுறம் கிரீன் பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டார். 19 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், 52 ரன்னில் அவுட்டானார். பின்ச் 7 ரன்னிலும், ஸ்டீவ் ஸ்மித் 9 ரன்னிலும், மேக்ஸ்வெல் 6 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாடிய அணியை டிம் டேவிட் சரிவில் இருந்து மீட்டார். அவரின் அரைசதத்தின் (54) உதவியுடன் ஆஸ்திரேலிய அணி நல்ல ஸ்கோரை எட்டியது. இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்துள்ளது. தையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.







