இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டி தொடங்கும் நேரத்தில் மழை குறுக்கிட்டது. மழை காரணமாக மைதானத்தில் அதிக அளவில் ஈரப்பதம் உள்ளது. இதனால் இந்தியா– தென் ஆப்பிரிக்கா இடையேயான 3-வது ஒருநாள் போட்டிக்கான டாஸ்போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் ஈரப்பதம் நீங்கிய பின்னர் இந்தப் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து தென்ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக மலான் மற்றும் டி காக் களமிறங்கினர். இன்னிங்சின் 3-வது ஓவரில் வாசிங்டன் சுந்தர் பந்துவீச்சில் டி காக் 6 ரன்களில் அவேஷ் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க வீரர்கள் மலான், ஹென்ரிக்ஸ், மார்க்ரம் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
குல்தீப் யாதவ் பந்துவீச்சில் சிக்கிய தென் ஆப்பிரிக்கா வீரர்கள் இமாட், நோர்ட்ஜெ ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 27.1 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக க்ளாஸென் 34 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும், சுந்தர், சிராஜ், ஷபாஸ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் தவான்- சுப்மன் கில் களமிறங்கினர். ஒருபக்கம் சுப்மன் கில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவான் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டாகி ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 42 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. அவரைத் தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷன் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
பின்னர் சுப்மன் கில் உடன் ஷ்ரேயஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கில் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஷ்ரேயஸ் ஐயர்- சாம்சன் ஜோடி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதியில் இந்திய அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 105 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.







