கர்நாடகாவில் ஆசியாவிலேயே பெரிய ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார்.
கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. வரும் மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த மாதம் உப்பள்ளி, யாதகிரி மற்றும் கலபுரகியில் நடந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் இன்று கர்நாடகம் வருகை தருகிறார். ஆசியாவிலேயே மிகப்பெரிய ஹெலிகாப்டர் உற்பத்தி ஆலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஆலையில் இலகுரக ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட உள்ளன.
இந்தத் தொழிற்சாலையில் 20 ஆண்டுகளில் 3 டன் முதல் 15 டன் எடை வரை ஆயிரம் ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.4 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறும். முன்னதாக, பெங்களூரு துமகூரு ரோட்டில் உள்ள சர்வதேச கண்காட்சி அரங்கத்தில் நடைபெறும் இந்திய மின்சார வார விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அதை முடித்துக்கொண்டு அவர் ஹெலிகாப்டரில் துமகூருவுக்குச் செல்கிறார்.
இதையொட்டி இன்று காலை டெல்லியில் இருந்து பிரதமர் மோடி தனி விமானம் மூலம் பெங்களூரு வருகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு பெங்களூரு மற்றும் துமகூருவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியின் போது, உலக எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களுடனான வட்டமேசை உரையாடலில் பிரதமர் பங்கேற்பார். பசுமை எரிசக்தியில் தன்னிறைவு அடைய எத்தனால் கலப்புத் திட்டம் அரசாங்கத்தின் முக்கிய கவனம் செலுத்தும் பகுதியாகும். அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகள் காரணமாக, 2013-2014 முதல் எத்தனால் உற்பத்தி திறன் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.







