இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவிப்பதில் அதிமுகவில் நிலவும் குழப்பத்திற்கு பாஜகவே காரணம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் இல்ல திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக சென்ற கே எஸ் அழகிரி கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது..
”நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெறுவார். எங்கள் அணியில் எந்த குழப்பமும் இல்லை.
எதிரணியில் வேட்பாளர் அறிவிப்பதில் கூட பெரும் குழப்பம் நீடிக்கிறது.
இந்த குழப்பத்திற்கெல்லாம் காரணம் பாஜகதான். பாஜகவின் நிலைப்பாடு என்னவெனில் தங்களுடன் இருப்பவர்களை பழிவாங்குவதுதான். மகாராஷ்டிராவில் பாஜகவின் கூட்டணியில் இருந்த சிவசேனா கட்சியை இரண்டாக உடைத்ததுடன், உடைக்கப்பட்ட அணியிலிருந்து ஒருவரை முதல்வர் ஆக்கியது பாஜக.
இதே போல் கோவாவில் சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக விலைக்கு வாங்கியது. தற்போது தமிழகத்தில் அண்ணா திமுகவை இரண்டு அணியாக பிரித்துள்ளது. எனவே எந்த அதிமுக அணி அறிவிக்கும் வேட்பாளரை ஆதரிப்பது என தெரியாமல் பாஜக
உள்ளது .
ஈரோடு இடைத்தேர்தலில் பிரச்சாரத்திற்கு ராகுல் காந்தி வருவதற்கு வாய்ப்பு இல்லை. எங்களது அணியை திமுக தலைவர் மு க ஸ்டாலின் திறம்பட வழி நடத்தி வருகிறார் . மகாபாரதத்தில் கிருஷ்ணரை போல் ஸ்டாலின் தற்போது எங்கள் கூட்டணியை ஸ்டாலின் வழி நடத்தி வருகிறார்.
காவிரி டெல்டா பாசன பகுதிகளில் சமீபத்திய மழையினால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளது அது குறித்து அமைச்சர்களுடைய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு ஆய்வு செய்து வருகிறது” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
– யாழன்







