லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கில் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடந்த பகுதிக்கு வந்த பாஜகவினர் கார்களில் ஒன்று விவசாயிகள் மீது மோதியது. இதனால் அங்கு வன்முறை ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். பாஜகவினர் வந்த கார்களில் ஒன்றில் மத்திய இணையமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்த நிலையில் அவர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து லக்கிம்பூர் சம்பவத்தை கண்காணிக்க உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்புக் குழு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அந்த மனு மீது விசாராணை நடத்திய உச்சநீதிமன்றம் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது. பின்பு, இதனை எதிர்த்து ஆஷிஷ் மிஸ்ரா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட்டது. இந்த வழக்கு கடந்த 19-ம் தேதி விசாரணைக்கு வந்த போது மனு மீதான விசாரணையை தள்ளி வைத்தது.
இந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு 8 வார காலம் இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர். மேலும் இந்த 8 வார காலமும் டெல்லியிலோ, உத்தரபிரதேசத்திலோ தங்கியிருக்கக் கூடாது என்ற நிபந்தனையை பிறப்பித்துள்ளனர்.







