ஆம்புலன்ஸில் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற நோயாளி

கடலூரில் மருத்துவக்காப்பீடு அட்டை பெறுவதற்காக, நோயாளி ஆம்புலன்ஸ் மூலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் திருவந்திபுரம் அடுத்த கே.என்.பேட்டையை சேர்ந்தவர் பேபி. 60 வயது மாற்றுத்திறனாளியான இவர் திருமணமாகதாவர்.…

கடலூரில் மருத்துவக்காப்பீடு அட்டை பெறுவதற்காக, நோயாளி ஆம்புலன்ஸ் மூலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் திருவந்திபுரம் அடுத்த கே.என்.பேட்டையை சேர்ந்தவர் பேபி. 60 வயது மாற்றுத்திறனாளியான இவர் திருமணமாகதாவர். தனியாக வசித்து வந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டில் தவறி விழுந்துள்ளார். இதனால் அவரது இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனை பார்த்த அவர் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், அங்கிருந்த மருத்துவர்கள் ஸ்கேன் எடுக்கவும், அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாலும் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் அட்டையை வாங்கி வரும்படி தெரிவித்துள்ளனர். அதனைப்பெற அவரது உறவினர்கள் வந்து ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிரிவில் கேட்ட போது நோயாளியை நேரில் கொண்டுவர தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவரது உறவினர்கள் பேபியை ஆம்புலன்ஸ் மூலம் ஆட்சியர் அலுவலகம் அழைத்து வந்து காப்பீடு அட்டைக்கான வழிமுறைகள் செய்து மீண்டும் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். உறவினர்கள் இருந்ததால் நோயாளி காப்பீடு அட்டை பெற முடிந்த நிலையில், ஆதரவற்ற நிலையில் எவரேனும் இருந்தால் அவர் காப்பீடு பெறுவது எவ்வாறு என்பது கேள்விக்குறியை அப்பகுதி மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.