மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பாலமாக செயல்படப்போவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், 43 பேர் புதிய அமைச்சர்கள் இடம்பெற்றனர். புதிய மத்திய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய அமைச்சரவையில் 15 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 28 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.
தமிழக பா.ஜ.க. தலைவர் எல். முருகனும் இணை அமைச்சராகப் பதவியேற்றார். அவருக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொறுப்பேற்றுக் கொண்ட பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், மீனவர்களின் நலன் காக்கும் வகையில் மத்திய அரசு செயல்படும் என்றும், மீன்வளத்தைப் பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் தான் பாலமாக செயல்படுவதாகவும், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.







