பாஜக மாநில தலைவராகப் பொறுப்பேற்ற ஒரே ஆண்டில் மத்திய அமைச்சராகி கவனம் ஈர்த்திருக்கிறார் எல்.முருகன்…..
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன், தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டபோது, மக்கள் மத்தியில் எழுந்த ஒரே கேள்வி, தமிழ்நாடு பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பது தான்…. அந்த கேள்விக்கு விடையாக, மக்களின் புருவங்களை உயர்த்தும் வகையில், எல்.முருகன் மாநில தலைவராக அறிவிக்கப்பட்டார். பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழ்நாடு பாஜக தலைவராக அறிவிக்கப்பட்டது அரசியல் அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்தாண்டு மார்ச் மாதம், பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவால் தமிழ்நாடு பாஜக தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்ட நிலையில், தலைவராகப் பொறுப்பேற்ற நாள்முதலே, தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கினார்..
நாடு முழுவதும் பாஜகவை வலுப்படுத்த அத்வானி கையில் எடுத்த ரத யாத்திரை போன்று, தமிழ்நாட்டில் வேல் யாத்திரையை நடத்தியது, எல்.முருகன் யார் என்பதைத் தமிழ்நாடு மக்களுக்கு எடுத்துக் காட்டியதுடன், கட்சியின் மேல்மட்ட தலைவர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள கோனூரைச் சேர்ந்த எல்.முருகன் அரசியலில் ஒவ்வொரு அடியாக முன்னேற ஆரம்பித்தார்.
சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் வெற்றிபெற்று சட்டப்பேரவையை அலங்கரிப்பார்கள் என அப்போதே எல்.முருகன் சூளுரைத்தார். அதேபோன்று, அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், தாராபுரம் தொகுதியில் களமிறங்கினார்.
இதனால், நட்சத்திர தொகுதியாக மாறிய தாராபுரத்தில், பிரதமர் மோடி தொடங்கி கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பலரும் பரப்புரை மேற்கொண்டனர். எல்.முருகன் மீது மேலிடத் தலைவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைக்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணமாக அமைந்தது.
தாராபுரம் தொகுதியில் எல்.முருகன் வெற்றிவாய்ப்பை நழுவ விட்டாலும், அவர் கூறியது போலவே, 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவையை பாஜக உறுப்பினர்கள் அலங்கரித்தனர். பாஜக உறுப்பினர்களை சட்டப்பேரவைக்கு அனுப்பி வைத்ததால் அப்போதே, எல்.முருகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாகப் பேசப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே, தற்போது அமைச்சரவை பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் எல்.முருகன். இதையடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அடிப்படையில், சட்டக்கல்வி முடித்து வழக்கறிஞரான எல்.முருகன், சென்னை உயர்நீதிமன்றத்தில் 15 ஆண்டு காலம் வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சட்டப்படிப்பில் இவர் முனைவர் பட்டமும் பெற்றவர். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக பொறுப்பு வகித்தது, இவரை நாடறியச் செய்தது. தற்போது, மத்திய அமைச்சராகியுள்ள எல்.முருகன், தமிழ்நாடு மக்களின் பிரச்சினைகளைத் தலைநகருக்குக் கொண்டு சென்று நிச்சயமாகத் தீர்வு காண்பார் என்று நம்பலாம்.
ஏற்கனவே நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிலையில், தற்போது 3-வது தமிழராக வாய்ப்பை பெற்றுள்ளார் எல்.முருகன்.