75 சதவீத கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தியது. தற்போது தொற்றின் வேகம் குறைந்து வருவதால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கொரோனா பரவல் காரணமாக, தமிழ்நாட்டில் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தனியார் பள்ளிகள் முழு கல்வி கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இரண்டு தவணைகளாக 75 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும் தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் தவணையாக 40 சதவீத தொகையை ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி முதல் வசூல் செய்யலாம் என்றும், இரண்டாம் தவணையாக 35 சதவீத தொகையை நேரடி வகுப்புகள் தொடங்கிய 2 மாத காலத்துக்குள் வசூலிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 25 சதவீத தொகையை வசூலிப்பது குறித்து சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.







