ரேசன் ஸ்மார்ட் கார்டுகளிலும் போலியா? அச்சிட்டு புழக்கத்தில் விட்டவர் கைது!

கோவை அருகே அன்னூரில் அனுமதியின்றி போலி ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் அச்சிட்டு விற்பனை செய்து புழக்கத்தில் விட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.  கோவை மாவட்டம் அன்னூர் கட்டபொம்மன் நகரைச் சேர்ந்தவர் அல்போன்ஸ் மகன்…

கோவை அருகே அன்னூரில் அனுமதியின்றி போலி ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் அச்சிட்டு விற்பனை செய்து புழக்கத்தில் விட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். 

கோவை மாவட்டம் அன்னூர் கட்டபொம்மன் நகரைச் சேர்ந்தவர் அல்போன்ஸ் மகன் அமல் ஆண்ட்ரூஸ் (28). அன்னூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தனியாக ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை
அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த இ-சேவை மையத்தில்
பணியாற்றி வந்துள்ளார். அங்கு புதிய ரேஷன் கார்டுகள் பதிவு செய்தல், வருமானச்
சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு அரசு ஆவணங்களை பதிவு செய்யும்
பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த பணியை ராஜினாமா செய்துள்ளார்.‌ அதன்பின் அன்னூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தனியாக ஜெராக்ஸ் கடை ஒன்றை தொடங்கி தற்போது வரை நடத்தி வருகிறார்.

இந்த கடையில் அரசு ரேஷன் கடைகளில் பயன்படுத்தப்படும் போலி ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படுவதாக அன்னூர் குடியுரிமை பொருள் தாசில்தார் செல்விக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இவர் அன்னூர் காவல் நிலையத்தில் இப்பிரச்சினை தொடர்பாக புகார் அளித்தார். இதையடுத்து அன்னூர் இன்ஸ்பெக்டர் நித்யா , சப் இன்ஸ்பெக்டர்கள்
சிவக்குமார், விக்னேஷ் மற்றும் போலீசார், அமுல்ஆன்ட்ரூஸ் நடத்தி வந்த கடைக்கு
நேற்று காலை சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கடையில் தமிழக அரசின் ரேஷன் அட்டைக்கான ஸ்மார்ட் கார்டுகளில் பயனாளிகள் புகைப்படம் இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அமுல்ஆன்ட்ரூசை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு விண்ணப்பித்து வராதவர்களுக்கு இவர் இந்த போலி ஸ்மார்ட் கார்டுகள் மூலம் பயனாளிகள் புகைப்படத்தை இணைத்து போலி ஸ்மார்ட் கார்டுகள் கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து இவரிடம் இருந்து பயனாளிகளின் புகைப்படம் அல்லாத 650 போலி ஸ்மார்ட் கார்டுகள், பயனாளிகளின் புகைப்படம் பொருத்திய 68 ஸ்மார்ட் கார்டுகள், ஒரு லேப்டாப், 2 செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அமல் ஆன்ட்ரூஸை அன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதனால் அன்னூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரெ. வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.