நவராத்திரியை முன்னிட்டு சென்னை குறளகத்தில் கொலு பொம்மைகளின் கண்காட்சி தொடங்கியுள்ளது.
ஆண்டுதோறும் புரட்டாசி அமாவாசைக்கு அடுத்த வளர்பிறை பிரதமை திதி முதல் நவமி திதி வரை ஒன்பது நாட்கள் முப்பெரும் தேவிகளை வணங்கும் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. முப்பெரும் தேவியரும் நவராத்திரி நாட்களில் பக்தர்களின் வீடுகளில் வாசம் செய்வார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது. அந்த காலகட்டத்தில் கொலு வைப்பது நவராத்திரியின் சிறப்பம்சம்சமாகக் கருதப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இரவு 10 மணி வரை கண்காட்சி
வரும் 26ஆம் தேதி நவராத்திரி தொடங்குவதை முன்னிட்டு, தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில் கொலு பொம்மை கண்காட்சியை அமைச்சர்கள் ஆர்.காந்தி, சேகர்பாபு ஆகியோர் தொடங்கிவைத்தனர். இக்கண்காட்சியில் கொலு பொம்மைகள் 10 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும் எனவும், காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.10 முதல் ரூ. 20 ஆயிரம் வரை பொம்மைகள்
இதுகுறித்து, கொலு பொம்மை விற்பனையாளர் சுப்பிரமணியன் கூறுகையில், முப்பெரும் தேவிகளின் பொம்மைகள், அஷ்டலட்சுமி அவதாரம், விஷ்ணுவின் தசாவதாரம், நவநரசிம்மர், கைலாச ஈசன் என காண்போரை கவரும் வகையில் கொலு பொம்மைகள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கொலு பொம்மைகள் 10 ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையில் இக்கண்காட்சியில் கிடைக்கிறது.
இந்த ஆண்டு சயன நரசிம்மர், ஏகபாதமூர்த்தி, வாஸ்து பெருமாள், வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகங்களோடு வீற்றிருக்கும் முருகப்பெருமான் ஆகியவை புது வரவுகளாக விற்பனைக்கு வந்துள்ளன என்றார்.
அக். 22 வரை கண்காட்சி
இதுகுறித்து, விற்பனையாளர் மேனகா கூறுகையில், கைவினை கலைஞர்களுக்கும் விவசாயிகளுக்கும் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்தோடு கலைநயமிக்க மண்பாண்டங்களும், பீங்கான் பொருட்களும், சிறுதானியங்களும் இக்கண்காட்சியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
நவராத்திரி அக்டோபர் மாதம் 5ஆம் தேதி நிறைவடைந்தாலும், அக்டோபர் 22ஆம் தேதி வரை கண்காட்சி நடத்தப்படுகிறது.
இந்த கொலு பொம்மைகளையும் இதர கலைப் பொருட்களையும் வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றார்.
இதுகுறித்து, சென்னையைச் சேர்ந்த மீனாட்சி கூறுகையில், கண்காட்சியில் இடம்பெற்றுள்ள
நீலகிரி மாவட்ட பழங்குடி மக்களின் தயாரிப்புகள், டெரகோட்டா மண்பொம்மைகள் உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
தரமானப் பொருட்கள் சலுகை விலையில் கிடைப்பதால் குறளகத்தில் கலைநயமிக்க பொருட்களின் விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது என்றார்.
– சுதாகர், செய்தியாளர், நியூஸ் 7 தமிழ்