கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் புதிதாக மனு அளிக்கப்பட்டுள்ளது
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017 ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை தொடர்பான வழக்கில் முன்னாள் முதல மைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி மறுத்த நீலகிரி நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளையில் முன்னாள் முதலமைச்சர் பழனிசாமியின் தொடர்பு குறித்து சயான் பேசியுள்ள நிலையில், அதன் தீவிரத்தைப் பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டது என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
கோடநாடு பங்களாவிலிருந்து காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்கு தான் தெரியும் எனவும், இதுகுறித்து புலன் விசாரணை குழு, வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.







