கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் வரும் ஜூன் மாதம் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றம் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து அமைச்சர் சேகர்பாபு பேசினார். அப்போது பேசிய அவர், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து ஊரப்பாக்கம் ஏரி வரை ரூபாய் 17 கோடி மதிப்பீட்டில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கப்படும் என்று கூறினார்.
மேலும், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் உள்ள ஆறு ஏக்கரில் ரூ. 8 கோடி மதிப்பீட்டில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தால் பூங்கா ஒன்று அமைக்கப்படும். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை ஒட்டியுள்ள அயனஞ்சேரி, மீனாட்சிபுரம் சாலையினை ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். 

கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் நிலத்தில் 393 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையம் ஜூன் மாதத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் எனும் பெயரில் மக்கள் பயன்ப்பாட்டிற்கு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்படும் என அறிவித்தார்.






