பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை 24 மணி நேரத்தில் மீட்டு பெற்றோருடன் போலீசார் ஒப்படைத்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் யூனிஸ். இவரது மனைவி திவ்யபாரதிக்கு மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை பிறந்து 4 நாட்களான திவ்யபாரதியின் பெண் குழந்தையை மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் 12 தனிப்படைகள் அமைத்து கடத்தப்பட்ட குழந்தையை மீட்க நடவடிக்கையை தீவிரப்படுத்தினார். சுமார் 250க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்ததில் இரண்டு பேர் குழந்தையை கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் குழந்தையை கடத்திய மர்ம நபர்களை தீவிரமாக தேடிய நிலையில் இன்று அதிகாலை கேரளா மாநிலம் கொடுவாயூர் பகுதியில் கடத்தப்பட்ட பெண் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.
பின்னர் மீட்கப்பட்ட பெண் குழந்தையை காவல் துறையினர் பெற்றோருடன் ஒப்படைத்தனர். குழந்தையை கண்டதும் பெற்றோர்கள் கண்ணீர் மல்க அழுது காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர். 24 மணி நேரத்தில் கடத்தப்பட்ட குழந்தையை மீட்ட போலீசருக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
இந்த நிலையில் குழந்தை கடத்தப்பட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், மற்றொரு நபரை தேடி வருவதாகவும் காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.








