கேரளாவின் முதல் திருநங்கை பாடிபில்டர் என்று புகழ் பெற்ற பிரவீன்நாத் நேற்று உயிரை மாய்த்துக்கொண்டார். அவரின் உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
பாலக்காட்டில் உள்ள எலவாஞ்சேரியைச் சேர்ந்தவர் 26 வயதான பிரவீன்நாத். இவர் 2018 ஆம் ஆண்டு, எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் இளங்கலைப் படிப்புகளில் சேர்ந்து படித்துள்ளார். அந்த சமயம்தான் அவர், தான் ஒரு பெண்ணாக மாறுவதை உணர்ந்துள்ளார். இதனால் அதே ஆண்டில் பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு பிறகு பாடிபில்டர் ஆக ஆசைப்பட்ட பிரவீன் 2020 ஆம் ஆண்டு அதற்கான உடற் பயிற்சிகளை மேற்கொண்டார். ஒரு வருடம் கழித்து, கடுமையான உழைப்பின் மூலம், 2021 ஆம் ஆண்டு திருச்சூரில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான பிரிவில் மிஸ்டர் கேரளா போட்டியில் கலந்துகொண்டு பட்டம் வென்றார். இதனை தொடர்ந்து 2022 இல் நடைபெற்ற சர்வதேச பாடி பில்டிங் சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டியாளராகவும் இருந்துள்ளார்.
இந்தநிலையில், பிரவீன்நாத், மலப்புரம் கோட்டைக்கல்லில் வசித்த ரிஷானா ஐஷூ என்பவரை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடந்தது. பிரவீன்நாத், தற்போது சாஹ்யத்ரிகாவின் வக்கீல் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த, ரிஷானா திருநங்கைகளுக்கான மிஸ் மலபார் பட்டத்தை வென்றுள்ளார். இதுதவிர ரிஷானா திருச்சூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதோடு, மாடலிங்கிலும் தீவிரமாக உள்ளார். மிகவும் சந்தோசமாக சென்று கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை மறுத்த பிரவீன்நாத், அதற்காக மனம் உடைந்து மிகவும் கவலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கேரளாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள, தனது வீட்டில் விஷம் அருந்தி தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள முயற்சித்த நிலையில், அவரை மீட்ட உறவினர்கள், உடனந்தியாக, திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் கேரளாவின் முதல் திருநங்கை பாடிபில்டர் என்று புகழ் பெற்ற பிரவீன்நாத் உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், திருநங்கை பாடிபில்டரான பிரவீன் நாத்தின் மரணம் குறித்து திருச்சூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா