கேரளா மாநிலம் களமசேரியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழப்பு எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சுமார் 2000 பேர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியானது.
குண்டு வெடித்த பின்பு, தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது. தகவலறிந்த பின், தீயணைப்பு மீட்புக் குழுவினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர். விசாரணையில், களமசேரியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் IED(Improvised Explosive Device) ரக குண்டு பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு டிபன் பாக்ஸில் IED வைத்திருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன என கேரள டிஜிபி தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து விசாரிக்க 8 பேர் கொண்ட தேசிய பாதுகாப்புப் படை கேரளத்துக்கு விரைந்துள்ளது. இது மிகவும் துரதிருஷ்டவசமான சம்பவம். சம்பவம் தொடர்பான விவரங்களை சேகரித்து வருகிறோம். அனைத்து உயர் அதிகாரிகளும் எர்ணாகுளத்தில் உள்ளனர். நாங்கள் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். விசாரணைக்கு பிறகே கூடுதல் விவரங்ள் தெரிய வரும் இவ்வாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
கேரளாவில் உள்ள ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்பட மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள் அனைத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டுள்ளது. இதனால் விசாரணை மேலும் தீவிரம் அடைந்துள்ளது.
இந்த நிலையில் களமசேரியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் கொச்சியை சேர்ந்த டோமினிக் மார்ட்டின் என்பவர் தான்தான் குற்றம் செய்ததாக ஒப்பு கொண்டு கொடகரை காவல் நிலையத்தில் ஆஜராகினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாராணையில் அவர்தான் குற்றத்தை செய்ததாக போலீசார் உறுதி செய்துள்ளனர். அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டு ரிமோட் மற்றும் குண்டு தயாரிக்க பயன்படுத்திய பொருட்களை கைப்பற்றினர்.
யோகாவா சாட்சி அமைப்புடன் தனக்கு அதிருப்தி இருந்ததாலும், அவர்களது கடுமையான கோட்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் தனக்கு பிடிக்காததாலும் குண்டு வைத்ததாக டோமினிக் வீடியோ வெளியிட்டு தெரிவித்தார்.
இந்நிலையில் களமசேரி குண்டு வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 52 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் தற்போது படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லிபினா (12) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.








