ஆந்திரா ரயில் விபத்து ஏற்பட்டு 9பேர் உயிரிழந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு இன்று பயணிகள் ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலும் விசாகப்பட்டினம்-பாலசா பயணிகள் ரயிலும் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளி தண்டவாளத்தில் மோதி விபத்துக்குள்ளாகின.
விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயிலில் பிரேக் பிடிக்காத நிலையில் அது தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், அதே தண்டவாளத்தில் விசாகப்பட்டினம்-பாலசா பயணிகள் ரயில் வந்ததால் இவ்விபத்து நடந்துள்ளது.
இதில் 3 பெட்டிகள் தடம் புரண்டுடன. அதில் இருந்த பயணிகள் காயமடைந்து உயிருக்கு போராடினார்கள். பயணிகள், ரயில்வே போலீசார், தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக விரைந்து சென்று மீட்பு பணியை தொடங்கினர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், 9பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் ஹெல்ப் லைன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விஜயநகரம் கலெக்டர் அலுவலகத்துக்கு 9493589157, ரயில்வே உதவி எண் 8978080006, ஹெல்ப் லைன் லேண்ட்லைன் நம்பர்களாக 0891 2746330, 08912744619, ஏர்டெல் எண்களாக 81060 53051, 8106053052, பிஎஸ்என்எல் எண்கள் 8500041670, 8500041671, ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் ஹெல்ப் லைன் எண்களாக 0674-2301625, 2301525, 2303069 அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சம்பவ இடத்தில் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர். மேலும் விஜயநகரம் வழித்தடத்தில் செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பல ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டுள்ளன. அதற்கான அறிவிப்பை மத்திய ரயில்வே அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளது.







