ராஜமௌலி இயக்கத்தில் வெளியான நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இந்த படத்திற்கு இசையமைத்த கீரவாணி எனும் மரகதமணி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்…
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் கடந்த மார்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இதில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 3 மொழிகளில் வெளியான இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1000ம் கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற கோல்டன் குளோப் விருதுக்கு ஆர்ஆர்ஆர் படமும் போட்டியிட்டிருந்தது. இந்த கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் பரிந்துரைக்கப்பட்டது. இந்த பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய பாடல் நாட்டு நாட்டு பாடலாகும்.
இந்த படத்திற்கு இசையமைத்தவர் கீரவாணி. தெலுங்கு திரையுலகில் மிக பிரபலமான இசையமைப்பாளர். இவர் மரகதமணி என்ற பெயரில் தமிழ் படங்களுக்கு இசையமைத்ததால், அந்த பெயராலேயே தமிழர்களால் அறியப்படுபவர். இவர் 1961ம் ஆண்டு ஜூலை மாதம் 4ம் தேதி ஆந்திராவில் பிறந்தார். 1990-ல் தொடங்கி தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து வெற்றிகரமாக பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இவர் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிப் படங்களில் பணியாற்றி தேசிய அளவில் மதிப்புக்குரிய இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார். இவருடைய முழுப் பெயர் கொடுரி மரகதமணி கீரவாணி. தமிழ்த் திரைப்படங்களுக்கு மரகதமணி என்ற பெயரைப் பயன்படுத்தினார். எனவே தமிழர்களுக்கு இவர் மரகதமணி தான். இசையிலும் அவர் ஒரு மரகதமணிதான். 1987-ல் தெலுங்கு இசையமைப்பாளர் கே.சக்ரவர்த்தியின் உதவியாளராகப் பணியாற்றத் தொடங்கினார். 1990-ல் ‘கல்கி’ என்ற படத்துக்கு இசையமைத்தார். அந்தப் படம் வெளியாகவில்லை. அதே ஆண்டு நம்மூரைச் சேர்ந்த மெளலி இயக்கத்தில் வெளியான ‘மனசு மகாத்மா’ என்ற தெலுங்கு படமே மரகதமணி இசையமைப்பில் வெளியான முதல் படமானது. ராம் கோபால் வர்மா இயக்கத்தில் 1991-ல் வெளியான ‘க்ஷண க்ஷணம்’ என்ற படமே இவர் தெலுங்கு சினிமாவில் இசையமைப்பாளராக நிலை பெற உதவியது.
தொடர்ந்து 1991ல் இயக்குநர் பாலசந்தர் இயக்கிய ‘வானமே எல்லை’ படத்துக்கும் மரகதமணி இசையமைத்தார். இந்தப் படத்திலும் அனைத்து பாடல்களும் வெற்றிபெற்றன. தொடர்ந்து வசந்த் இயக்கத்தில் பாலச்சந்தர் தயாரித்த ‘நீ பாதி நான் பாதி’ படத்துக்கும் பாலச்சந்தர் இயக்கிய ‘ஜாதி மல்லி’ ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். சில ஆண்டுகள் பாலச்சந்தர் தயாரிப்புகளுக்கும் அவர் இயக்கும் படங்களுக்கும் ஆஸ்தான இசையமைப்பாளராகத் திகழ்ந்தவர். அர்ஜுன் நடித்து இயக்கிய ‘சேவகன்’, ‘பாட்டொன்று கேட்டேன்’, ‘கொண்டாட்டம்’ ஆகிய மற்ற இயக்குநர்களின் படங்களுக்கும் மரகதமணி இசையமைத்தார்.
தெலுங்கு சினிமாவில் இன்றுவரை தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளராகவும் மதிப்புமிக்க மூத்த கலைஞருக்கான மதிப்பைப் பெற்றவர் மரகதமணி. 1997-ல் வெளியான ‘அன்னமய்யா’ படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றார். பல ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் நந்தி விருதுகளையும் வென்றுள்ளார்.இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பின்னணிப் பாடகராகவும் பாடலாசிரியராகவும் முத்திரை பதித்துள்ளார். இசைக்காக மட்டுமில்லாமல் இந்த இரு துறைகளிலும் ஃபிலிம்ஃபேர், நந்தி விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழில் முதல் படமான ‘அழகன்’ படத்துக்கே தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வென்றார். மம்முட்டி நடித்த இந்த படத்தின் பாடல்களும் பெரும் ஹிட் அடித்து ரசிகர்களின் மனதில் இப்போதும் ரிங்காரம் இட்டு வருபவவை.
தெலுங்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான ‘மாவீரன்’, ‘நான் ஈ’, ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’ ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அதிக பிரபலமடைந்தவர் மரகதமணி. இவற்றில் ‘விமர்சகர்களின் பாராட்டிலும் வசூலிலும் உலக சாதனை படைத்த ‘பாகுபலி’ படங்கள் மூலம் தேசிய சர்வதேச கவனத்தை ஈர்த்தார். ‘பாகுபலி’ இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஒன்று விட்ட சகோதரரான மரகதமணி அவர் இயக்கிய அனைத்து படங்களுக்கும் இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.