கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு ஆளுநர் தமிழசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கேதார்நாத்தில் இருந்து குப்தகாசி நோக்கி சென்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. பாதாவில் இருந்து கேதார்நாத்க்கு சென்ற போது ஏற்பட்ட விபத்தில் 2 விமானிகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
இந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பிரேம்குமார், கலா,சுஜாதா ஆகிய 3 பேரும் சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர்கள் என உத்தரகாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது. மீதி 2 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த விமானப்போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த சுஜாதா,கலா,பிரேம்குமார் ஆகியோர் குடும்பத்தினருக்கு தேவைப்படும் உதவிகளை வழங்கிட வேண்டுமென்று அம்மாநில அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்துள்ளேன்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.







