கேதார்நாத்திற்கு ஆன்மீக பயணம் மேற்கொண்ட சென்னையை சேர்ந்த மூவர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் அருகே இன்று காலை ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் இருவர் விமானிகள் என்றும் உறுதியானது. இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்த அம்மாநில அரசாங்கம், மீட்புப்பணிகளை விரைவாக மேற்கொள்ள உத்தரவிட்டிருந்ததை அடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து அறிக்கையானது இன்று மாலை வெளியானது. அதில் விபத்தில் உயிரிழந்த 7 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டது. விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியானது. உயிரிழந்தவர்களில் பிரேம்குமார், கலா, சுஜாதா ஆகியோர் சென்னையை திருமங்கலம் பகுதியில் உள்ள சாந்தம் காலணியை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. தமிழகத்தில் இருந்து மூவரும் கேதர்நாத்தில் உள்ள ஸ்தலத்திற்கு சென்ற பக்தர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இறந்தவர்களில் பிரேம்குமார் மற்றும் அவரது மனைவி சுஜாதா, தங்கை கலா மற்றும் ரமேஷ் ஆகியோர் கடந்த 12 ஆம் தேதி கீர்த்தி யாத்ரா எனும் பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் மூலமாக ஆன்மீக சுற்றுப்பயணமாக கேதர்நாத் சென்றுள்ளனர். இதில் ருத்ர பிரயாக் எனும் இடத்தில், பிரேம்குமார், சுஜாதா மற்றும் அவரது தங்கை கலா என மூவரும் ஹெலிகாப்டர் பயணம் மேற்கொள்கிறார்கள். கலாவின் கணவர் ரமேஷ் என்பவர் மட்டும் குதிரையில் பயணம் மேற்கொள்ள இருந்ததால் அவர் ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொள்ளவில்லை என தகவல் தெரிவிக்கப் படுகிறது.
வரும் 23 ஆம் தேதி பயணம் முடிந்தது சென்னை வருவதாக உத்தேசம் இருந்த நிலையில், ருத்ர பிரயாக் எனும் இடத்தில் பிரேம்குமார், சுஜாதா கலா என மூவரும் இன்று காலை ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். உயிரிழந்த மூவரும் கணவன் மனைவி மற்றும் தங்கை என ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
உயிரிழந்த பிரேம்குமார் மற்றும் சுஜாதா தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் ஆகியோர் உள்ளனர். சுஜாதாவின் தங்கை கலாவுக்கும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்தவர்களின் உடலை பெற்றுக்கொள்வதற்காக, பிரேம்குமாரின் அண்ணன் ராம் குமார் நாளை காலை டேராடூன் செல்லவுள்ளார். உயிரிழந்தவர்களுக்கு சொந்தமான திருமங்கலம் சாந்தம் காலணி பகுதியில் உள்ள அவர்களது வீட்டில், மத்திய மண்டல வருவாய் உட்கோட்ட நடுவர் பிரவீனா மற்றும் திருமங்கலம் சரக உதவி ஆணையர் வரதராஜ் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
கேதர்நாத் ஸ்தலத்திற்கு பயணம் மேற்கொண்டு, எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலியான சம்பவத்திற்கு, பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருந்தனர். அதனை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைச்சர்கள் தமிழகத்தை சேர்ந்த 3 பேரின் குடும்பங்களுக்கும் தங்கள் இரங்களை தெரிவித்து வருகின்றனர்.







