கரூரில் “நம்ம ஊரு சூப்பரு” திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தூய்மை பணி மேற்கொண்டார்.
கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி பகுதியிலுள்ள மொச்சக்கொட்டம்பாளையம் கிராமத்தில் இன்று “நம்ம ஊரு சூப்பர்” என்ற இயக்கத்தின் மூலம் தூய்மைப் பணிகளை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பார்வையிட்டார். அப்போது கோவிந்தம்பாளையம் பகுதியில் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தூய்மை பணி மேற்கொண்டார். மேலும், தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களிடம், இருகரம் கூப்பி தனது நன்றியை தெரிவித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பல்வேறு துறைகள் மூலம் ஒருங்கிணைந்து “நம்ம ஊரு சூப்பரு” என்ற மாபெரும் இயக்கம் மாநிலம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகின்றது. கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி கிராமங்களிலும் பல்வேறு பணிகள் இந்த இயக்கத்தின் கீழ் நடைபெற்று வருகின்றன. இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம் மக்களுக்கு சுத்தத்தையும், சுகாதாரத்தையும் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, நமது இடத்தினை பசுமையாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே.
குறிப்பாக மாவட்டத்தில் எந்தெந்த ஊராட்சி கிராமங்களில் சாலையோரங்களில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசக்கூடிய பகுதிகளை கண்டறிந்து அந்தப் பகுதிகளை தூய்மையாக்குவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் இயந்திரங்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் மக்களைக் கொண்டு தூய்மை செய்வதற்கு 456 இடங்களை கண்டறியப்பட்டு 23.08.2022 முதல் 02.09.2022 வரை இந்தத் தூய்மை பணிகள் செய்வதற்காக செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றது. இதில் 267 இடங்களில் குப்பை தேங்கியுள்ள அல்லது அதிகம் உள்ள முக்கிய பகுதிகளை கண்டறிந்து ஆய்வு செய்யப்பட்டு தூய்மைப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதே போல் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கும் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் தூய்மை, சுகாதாரம் மற்றும் கழிவுகள் மேலாண்மை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய திட்டங்களும் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து தனிநபர் இல்லங்களில், கிராமபுற பகுதிகளில் சுகாதாரம் பேணுவது தொடர்பாக சுய உதவி குழுக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழியைகுறைப்பதற்காக மீண்டும் மஞ்சப்பை இயக்கம் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சுத்தமான பசுமை கிராமங்களை உருவாக்குவதற்கு அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டும், கரூர் புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு வாசகர்களுக்கும் தலா ஒரு மரக்கன்றுகள் வழங்கி அதனை கண்காணித்து வருகிறோம். அதோடு மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடுவதற்கு இரண்டு லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து வருகின்றோம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.