நாட்டின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் முதன்மையான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யூ) உலகிற்குப் பல அறிஞர்கள், ஆராய்ச்சி மாணவர்களை அளித்துள்ள நிலையில் தற்போது கின்னஸ் சாதனையாளர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் உள்ள சுற்றுச்சூழல் துறையில் கணினி இயக்குபவராக பணிபுரிந்து வருபவர் வினோத் குமார் சௌதிரி (41). பல்கலைக்கழகத்தில் தினமும் தரவுகளைக் கணினியில் பதிவு செய்வதுதான் வினோத் குமாரின் பணி. பார்ப்பதற்குச் சாதாரண கணினி ஆப்ரேட்டராகத் தோன்றும் வினோத் குமார் வேகமாகத் தட்டச்சு செய்து இதுவரை 8 முறை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மூக்கை பயன்படுத்தி தட்டச்சு
இவர் கடந்த 2014-ம் ஆண்டு மூக்கை கொண்டு வேகமாகத் தட்டச்சு செய்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் முதல் முறையாக இடம்பெற்றார். அதேபோல் கண்களைக் கட்டிக்கொண்டு தட்டச்சு செய்வது, ‘mouth stick’ கொண்டு வேகமாகத் தட்டச்சு செய்வது எனப் பல வித்தியாசமான முறைகளில் தட்டச்சு செய்து கின்னஸ் சாதனைப்படைத்துள்ளார்.
தட்டச்சு துறையில் இத்தனை சாதனைகளைச் செய்துள்ள வினோத் குமார் தன்னுடைய வீட்டில் ஏழை மற்றும் திறனாளி குழந்தைகளுக்குக் கணினி பயிற்சி அளித்துவருகிறார் என்பது கவனிக்கப்படவேண்டிய விஷயமாகும்.
“எனக்கு எப்போதுமே வேகமாகச் செயல்படுவதில் அதிக ஆர்வமுண்டு. இதற்காகவே சிறுவயதில் நிறைய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வேன். ஆனால் உடல்நிலை பாதிப்பு காரணமாக என்னால் விளையாட முடியவில்லை. விளையாட்டில் காட்டவேண்டிய வேகத்தை என்னுடைய கணினியில் உள்ள தட்டச்சுப் பலகையில் காண்பிக்கத் தொடங்கினேன். என்னுடைய முதல் கின்னஸ் சாதனையை 2014-ம் ஆண்டு தொடங்கியது. அப்போது 103 எழுத்துகளை 46.30 விநாடிகளில் மூக்கை கொண்டு தட்டச்சு செய்து கின்னஸ் சாதனைப்படைத்தேன்.
இந்த சாதனைப் புரிந்த பிறகு எனக்கு கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்டது. அந்த தருணம் என் வாழ்க்கையில் மேலும் பல சாதனைகள் புரிய வேண்டும் என்ற உத்வேகத்தை வழங்கியது” என்கிறார் வினோத் குமார்.
சாதனைகளை முறியடித்த சாதனையாளர்
முதல் சாதனை கொடுத்த உத்வேகத்தைத் தொடர்ந்து ஒரு வருடம் வேகமாகத் தட்டச்சு செய்யும் பயிற்சியில் அவர் ஈட்டுப்பட்டுள்ளார். வினோத் தன்னுடைய 2-வது சாதனையாக ஆங்கில அகரவரிசைகளைக் கண்களைக் கட்டிக்கொண்டு 6.71 விநாடிகளில் தட்டச்சு செய்து முடித்தார். பின்னர் தன்னுடைய முந்தைய சாதனை முறியடிக்கும் வகையில் ஆங்கில அகரவரிசையைக் கண்ணைக் கட்டிக்கொண்டு 6.09 விநாடிகளில் தட்டச்சு செய்து சாதனைப்படைத்துள்ளார்.
சமூகவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள வினோத் குமார் கடந்த 2017-ம் ஆண்டு ‘mouth stick’ கொண்டு ஆங்கில அகரவரிசைகளை 18.65 விநாடிகளில் தட்டச்சு செய்து சாதனைக்கு மேல் சாதனைப் புரியத் தொடங்கினார்.
2017-ம் ஆண்டு வினோத் குமார் புரிந்த சாதனையை அவரே 2018-ம் ஆண்டு 17.69 விநாடிகளில் முறியடித்தார். அதேபோல் 2019-ம் ஆண்டு முந்தைய சாதனையை மூன்றாவது முறையாக 17.01 விநாடிகளில் முறியடித்து சாதனைக்கு மேல் சாதனைப்படைத்தார்.

இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது ஒரு விரலைக்கொண்டு அனைத்து ஆங்கில அகரவரிசைகளையும் 29.53 விநாடிகள் தட்டச்சு செய்து சாதனை மன்னனாக விளங்கினார் வினோத்.
“கின்னஸ் புத்தகத்தில் 19 முறை இடம்பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு. அதற்காக பல வித்தியாசமான யோசனைகளை உருவாக்கி கடுமையாக பயிற்சி செய்துவருகிறேன்” என்கிறார் வினோத்.
சாதனை மன்னன்
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய 9 கின்னஸ் சாதனைப்படைத்துள்ளார் வினோத். இம்முறை தட்டச்சுக்குப் பதில் வினோத் குமார் தேர்ந்தெடுத்தது டென்னிஸ் பந்துகளை. ஒரு டென்னிஸ் பந்தை ஒரு நிமிடத்திற்குள் எத்தனை முறை தொடமுடியும் என்பதுதான் வினோர் குமார் எடுத்துக்கொண்டு புதிய யுக்தி.
இந்த புதிய யோசனை வினோத் குமார் கின்னஸ் குழுவினரிடம் சொன்னபோது அவர்கள் ஒரு விநாடியில் 180 முறை டென்னிஸ் பந்தைத் தொடவேண்டும் என இலக்கு நிர்ணைத்தார்கள். ஆனால் கின்னஸ் குழுவினரின் இலக்கை காட்டிலும் 205 முறை டென்னிஸ் பந்தை வினோர் குமார் சௌதிரி தொட்டு தன்னுடைய புதிய கின்னஸ் சாதனையை நிகழ்த்திக்காட்டியுள்ளார்.
எளிமை என நாம் சாதாரணமாக நினைக்கும் விஷயங்களைச் சாதனைக்கான துறைகளாக மாற்றி இந்தியாவின் கின்னஸ் மண்ணாகத் திகழ்கிறார் இந்த தட்டச்சர்.