விமான இறக்கைகளை வைத்து 39 ஏர்லைன்ஸ் நிறுவனங்களை அடையாளம் கண்டுபிடித்து 12 வயது சிறுவன் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் சித்தார்த் கம்பர் என்ற 12 வயது சிறுவன் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். இவருக்கு நினைவாற்றல் மிக அதிகம். அதனால் பெற்றோர் சிறுவயது முதலே இவருக்கு ஏராளமான பயிற்சி அளித்து வந்துள்ளனர். ஒரு படத்தை பார்த்து அதனை அடையாளம் காண்பதில் இவர் வல்லவர். அந்தவகையில் விமான இறக்கைகளை பார்த்து, அது எந்த ஏர்லைன் நிறுவனம் என்பதை கண்டுபிடித்துள்ளார். ஒரு நிமிடத்தில் 39 விமான நிறுவனங்களை அடையாளம் கண்டுபிடித்து உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
இதுமட்டுமல்லாமல் உலகின் டாப் 100 கட்டடங்களையும் சரியாக அடையாளம் கண்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் சிறுவயதில் இந்த சாதனையை படைத்த முதல் நபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். முன்னதாக “India book of world records’ என்ற சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்திருந்தார். தனது பெற்றோரின் ஆதரவால் மட்டுமே இந்த சாதனைகளை படைக்க முடிந்ததாக சிறுவன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
சிறுவன் சித்தார்த்துக்கு சிறுவயது முதலே சின்னங்கள், லோகோ உள்ளிட்டவைகளில் அதிக ஈடுபாடு இருந்துள்ளது. அதனால் இதனை பயன்படுத்தி வித்தியாசமான உலக சாதனை படைக்க நினைத்ததாக சிறுவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.







