UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பழங்குடியின மக்களின் உரிமைக்காக போரடியவரும் யேசு சபை பாதிரியாருமான 84 வயதான ஸ்டேன் சுவாமி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானதான மும்பை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி, மகாராஷ்டிர மாநிலம், புனே நகருக்கு அருகில் உள்ள கோரிகோன் பிமா பகுதியில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுபவர்களை ஒருங்கிணைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மறுநாள் அப்பகுதியில் கலவரம் மூண்டது. அந்த கலவரத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், அங்கு நடந்த நிகழ்ச்சியில் பலர் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதால்தான் அடுத்தநாள் கலவரம் நடந்ததாக அறிக்கை தாக்கல் செய்தனர். மேலும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுபவர்கள் என பலர் UAPA அதாவது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். அதில், வரவர ராவ், ஆனந்த் டெல்டும்டே, சுதா பரத்வாஜ், கௌதம் நவ்லகா மற்றும் பாதிரியார் ஸ்டேன் சுவாமி உள்ளிட்டோரும் அடங்குவர். மேலும் இவர்களுக்கு தடைசெய்யப்பட்ட நக்சலைட் மற்றும் மாவோயிஸ்ட் அமைப்புகளோடு தொடர்பு இருப்பதாகவும் போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்ட பாதிரியார் ஸ்டேன் சுவாமி மட்டுமே இதில் மற்றவர்களை விட வயதில் மூத்தவர். இவர் கடந்த 50 ஆண்டுகளாக ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளார். இந்நிலையில் இவர் கைது செய்யப்பட்டபோதே இவருக்கு உடல்நலக்குறைவு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். மேலும் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் அவரை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் உடல் நிலை குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை எனக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்தது.

இந்நிலையில் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வந்த நிலையில் கடந்த மே மாதம் 29ம் தேதி அவர் மும்பையில் உள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் (Holy Family Hospital) அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே பல முறை அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் மருத்துவமனையில் இருந்தவாறே, தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என ஸ்டேன் சுவாமி வீடியோ கான்பிரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். ஆனால் மீண்டும் அவரது உடல்நிலை குறித்து உறுதியான முடிவுகள் இல்லை என காவல்துறை கூறியதால் அவரது ஜாமீன் மனு மீண்டும் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனாவிற்கு பின்னான நோயினாலும், அவரது நுரையீரல் தாக்கப்பட்டு நிமோனியா ஏற்பட்டதாலும் சிகிச்சை பலன் இன்றி இன்று பிற்பகல் 1:20 மணியளவில் உயிரிழந்ததாக, ஹோலி ஃபேமிலி மருத்துவமனை நிர்வாகம் மும்பை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது. இந்நிலையில் அவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பாதிரியார் ஸ்டன் சாமியின் உயிரிழப்பு, சமூக செயற்பாட்டாளர்கள், மனி உரிமை செயற்பாட்டாளர்கள், இயற்கை ஆர்வலர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுபவர்கள் மற்றும் ஜார்கண்ட் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிரியார் ஸ்டன் சாமி, தமிழ்நாட்டில் உள்ள திருச்சி மாவட்டத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.







