“ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரும்” – மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் பேட்டி!

திமுக அரசு தமிழக மக்களின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் இறையாண்மையும் கெடுத்துவிட்டது என்று மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மதுரை மண்டேலா நகர் பகுதியில் நாளை பாரத பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடைபெறும் திடலில் மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக மதுரை விமான நிலையத்தில் மத்திய அமைச்சருடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார், எஸ்பி வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மற்றும் இந்திய கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்றனர்.

அப்போது மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “பிரதமர் மோடி நாளை மதுரை வருகிறார். திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற திமுக அரசு பாரபட்சமாக நடக்கிறது. திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றாதது அவமானம்.

திமுக அரசு தமிழக மக்களின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் இறையாண்மையும் கெடுத்துவிட்டது. ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரும். புதிய அரசாங்கம், புதிய மக்கள் நலத்திட்டங்கள் NDA ஆட்சியில் நிச்சயம் வழங்கப்படும். எடப்பாடி பழனிச்சாமி தான் தமிழகத்தில் தலைமை தாங்குகிறார்.

பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், ஒவ்வொரு தலைவர்களும் ஒவ்வொரு நண்பர்கள் மற்றும் பழக்க வழக்கங்களை வைத்து கொள்வார்கள். அதேபோல் அவரும் வைத்துள்ளார். அதிமுக, பாஜக தொகுதி பங்கீடு குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், இது ஒரு குடும்ப விஷயம். எங்களுக்குள் நடைபெறும் விஷயங்களை வெளியில் பேச முடியாது. இறுதி செய்த பின்பு கண்டிப்பாக சொல்வோம். ஈரான் போர் குறித்த கேள்விக்கு “இது குறித்து வெளியுறவு துறை அமைச்சர் தான் பதில் சொல்ல முடியும். என்னால் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.