‘ஜனநாயகன்’ ரிலீஸ் ஒத்திவைப்பு – தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஜனவரி 9ம் தேதி ‘ஜனநாயகன்’ வெளியாகாது என பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் விஜய்யை வைத்து இயக்குநர் எச்.வினோத் ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கி உள்ளார். விஜய் முழுநேர அரசியலில் இறங்க உள்ளதால் ‘ஜனநாயகன்’ படம் தான் விஜய்யின் கடைசி படம் ஆகும். இந்த நிலையில் படத்தின் மீது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வருகிற 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

‘ஜனநாயகன்’ படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து, படத்தை கடந்த மாதம் தணிக்கை வாரியத்திற்கு படக்குழு அனுப்பியது. ஆனால் இந்த படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. இதன் காரணமாக தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கே.வி.என். நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜன நாயகன் தணிக்கை சான்றிதழ் வழக்கில் 9-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிட்டது.

இதனால் திட்டமிட்டபடி 9-ம் தேதி படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜனவரி 9-ம் தேதி ‘ஜனநாயகன்’ வெளியாகாது என பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கனத்த இதயத்தோடு இந்த அறிவிப்பை எங்கள் மதிப்புமிக்க பங்குதாரர்கள் மற்றும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். ஜனவரி 9-ந்தேதி ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு, எங்கள் கட்டுப்பாட்டை மீறிய தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சுற்றியுள்ள எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் உணர்ச்சிகளை நாங்கள் ஆழமாகப் புரிந்துகொள்கிறோம்.

இந்த முடிவு எங்களில் எவருக்கும் எளிதான ஒன்றல்ல. புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும். அதுவரை, உங்கள் பொறுமையையும், தொடர்ச்சியான அன்பையும் வழங்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் அசைக்க முடியாத ஆதரவுதான் ‘ஜனநாயகன்’ குழுவின் மிகப்பெரிய பலம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.