’ஜன நாயகன்’ தணிக்கைச் சான்று வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் ஜன. 15ல் விசாரணை என தகவல்..!

ஜனநாயகன் திரைப்பட தணிக்கை வழக்கானது ஜனவரி 15ம் தேதி விசாரிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

தவெக என்னும் அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜயின் கடைசி திரைப்படம் ஜன நாயகன். ஹெச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, பாபிதியோல், நரேன், மமிதா பைஜு, பிரியா மணி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு இப்படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தணிக்கை விவகாரம் தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனமானது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் ஜன நாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும், மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் தர பட நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணையும் ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த சூழலில் ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விதித்த இடைக் காலத் தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கானது ஜனவரி 19 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உத்தேச பட்டியல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் ஜனநாயகன் திரைப்பட தணிக்கை வழக்கானது உத்தேசப்பட்டியில் முன்நகர்ந்து ஜனவரி 15ம் தேதி விசாரிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.