மக்கள் நீதி மய்யம் சார்பில், சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார். அவருடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த நடைபயணத்தில் பங்கேற்ற தனது கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் கமல்ஹாசன் விருந்து வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முன்னதாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், “பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர். அதனை நாம் எதிர்க்க வேண்டும். அதன் காரணமாகவே நாம் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றோம். மதத்திற்கு எதிரான அரசியலை தடுக்க வேண்டும். ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில் பாரத் ஜோடோ யாத்ரா அமைந்துள்ளது. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நான் ’ஏ’ சொன்னால் ’ஏ’ சொல்லுங்கள். ’பி’ சொன்னால் ’பி’ சொல்லுங்கள், ’சி’ சொன்னால் ’சி’ சொல்லுங்கள்.
உங்கள் ஆதரவுடன் மட்டுமே தலைமை பொறுப்பில் உள்ளேன். எனவே, தலைமை கட்டளைகளை, உத்தரவுகளை மீறுபவர்கள் மீது பாரா முகத்தோடு இருக்க மாட்டேன். சென்னையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டு உள்ளோம். விரைவில் அதற்கான இடம் அறிவிக்கப்படும். மெரினாவில் நடத்த வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.
நீங்கள் செய்யும் நல்லது கெட்டது அனைத்தையும் நான் பார்த்துகொண்டு உள்ளேன்.
உங்களுக்கு பஞ்சாயத்து செய்ய என்னிடம் நேரமில்லை. எந்த கட்சியாக இருந்தாலும் மதத்தை வைத்து இங்கு அரசியல் செய்ய முடியாது ஏன் என்றால் இது தமிழ்நாடு. அண்ணா என்பது அவர் பெயர் மட்டும் இல்லை. அது ஒரு உறவு. மக்கள் நம்முடைய நலனில் யார் பேசுகிறார்களோ அவர்கள் பின் செல்வார்கள். அந்த நலனை நான் தேடி கொண்டுள்ளேன்.
கட்சியை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துகிறோம். இந்தியா சிதைந்து விடக்கூடாது என்பதற்காக நடப்பது தான் பாரத் ஜாடோ யாத்திரை.
தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்வதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளோம். பல்வேறு போராட்டங்களுக்கு பிறகே தமிழ்நாடு என்ற பெயர் வந்துள்ளது.
இதை மாற்ற சொல்லுவதற்கு அவர் யார்? அவருடைய பெயரை ரவி என்பதை புவி என மாற்றி கொள்வாரா? மதத்தை அரசியலின் கருவியாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “நிர்வாகிகளை நான் சந்தித்து பேசிய ஒரே காரணம் என்னுடைய குரல் கேட்டதும் அனைவரும் வந்தார்கள். ஜல்லிக்கட்டை சென்னையில் நடத்த திட்டமிட்டு உள்ளோம். அதற்கு அனுமதி பெறுவது தொடர்பாக பேசி வருகிறோம். சென்னையில் ஜல்லிக்கட்டுகாக நடத்திய போராட்டத்தை நான் இன்னும் மறக்கவில்லை. போராட்டம் நடைபெற்ற அதே இடத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாது. பல சிக்கல் உள்ளது. நகரத்தில் இருப்பவர்களுக்கும் ஜல்லிக்கட்டு புரிய வேண்டும். அதற்காக சென்னையில் நடத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.