கர்நாடக சட்டமன்ற தேர்தலில், பாஜக சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிட ஒரு தமிழருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கர்நாடகாவில் நியூஸ்7 தமிழுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரத்யேகமாக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “கர்நாடக சட்டமன்ற தேர்தலில் மே 13ம் தேதி, மகிழ்ச்சியான செய்தி வரும் என்ற நம்பிக்கையில் அனைவரும் உழைத்து வருகிறோம். ஊழல் குற்றச்சாட்டை முன்வைக்கும்போது அதற்கான ஆதாரங்களை காட்ட வேண்டும். ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைக்கும்போது எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கர்நாடக காங்கிரஸ் கட்சியினர், பாஜக மீது ஊழல் புகார் கூறுகின்றனர். அதற்கான ஆதாரங்களை காட்டுங்கள் என்று தான் கேட்கிறோம். 80 எம்எல்ஏ-க்களை வைத்திருக்கும் ஒரு எதிர்க்கட்சியால், தாங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்களை கொடுக்க முடியவில்லை என்றால், அவர்கள் ஆட்சியாளர்களாக மாறி மக்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறார்கள்? கர்நாடக மக்கள் மிகவும் தெளிவாக உள்ளனர். ஒரு பொய் புகாரை எந்த ஆதாரமும் இல்லாமல் கூறினால் மக்கள் நம்ப மாட்டார்கள்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினர் 80 பேர் எம்எல்ஏ-க்கள் ஆகியுள்ளது ராகுல் காந்தியால் அல்ல. ராகுல் காந்தி பிரச்சாரத்தில் ஈடுபடுவதால், காங்கிரஸுக்கு கூடுதல் வாக்குகள் கிடைக்கும் என்பது அரசியலில் அடிப்படை புரிதல் இல்லாதவர்களின் கூற்று. கர்நாடகா ராகுல் காந்தியை அமர் அக்பர் ஆண்டனி என பல அவதாரங்களாக பார்த்துள்ளது. ஒரு தேர்தலுக்கு இந்துவாகவும், ஒரு தேர்தலுக்கு இஸ்லாமியராகவும், ஒரு தேர்தலுக்கு கிறிஸ்தவராகவும் கர்நாடகாவுக்கு வருபவர் ராகுல் காந்தி.
பிரதமரைப் பொறுத்தவரை தன்னை எப்போதும் இந்துவாகத்தான் காட்டியிருக்கிறார். எல்லா மதத்தினரையும் அணைத்துச் செல்பவராகவே இருந்திருக்கிறார். எந்த மதத்திற்கும் அவர் எதிரானவர் அல்ல. நாங்கள் நாங்களாக இருக்கிறோம். காங்கிரஸ் அவர்களாக இல்ல. தேர்தலுக்கு ஏற்றாற்போல் மாற்றி பேசுகின்றனர். வீரேந்திர பட்டேலின் ஆட்சியை கவிழ்த்தது யார்? ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி தானே
கே.ஜி.எஃப் படத்தில் தங்க வயலில் கிடைத்த தங்கத்தை பணமாக மாற்றி ஏழை மக்களுக்கு கொடுப்பது போல, அடுத்த முறை நான் ஹெலிகாப்டரில் பணத்தை கொண்டு சென்று ஏழை மக்களிடம் நான் கொடுக்கப்போகிறேன்; ராக்கி பாயும் வருவார். நீங்களும் வரவேண்டும். அந்த படத்திற்கு பெயர் ’கேஜிஎஃப்-3’.
இந்த முறை பாஜக சார்பில் ஒரு தமிழரை புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடச் செய்துள்ளோம். கர்நாடக தேர்தல் வரலாற்றில் அதிகம் இதுபோல் நடப்பதில்லை. அரசியல் கட்சியின் நோக்கம் தேர்தலில் வெற்றி பெறுவதுதான். நாம் யாருக்கும் எதிரானவர்கள் கிடையாது. தேர்தலில் வெற்றி பெறக்கூடிய சூழலை தமிழராக நாம் உருவாக்க வேண்டும். தமிழன் என்ற காரணத்திற்காக, கர்நாடகாவில் எப்படி வாய்ப்பு கொடுக்க முடியும்? அரசியல் ரீதியாக தமிழன் அங்கு முன்னேறி வந்ததால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழன் என்பதற்காக எப்போதும் பாஜக உங்களை புறக்கணிக்காது என்பதற்கு புலிகேசி நகர் தொகுதி வேட்பாளர் ஒரு சான்று” என்று தெரிவித்தார்.
இதுகுறித்த முழு வீடியோவைக் காண :