தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து தமிழ்நாடு அரசுடன், பிரதமர் அலுவலகம் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 17 மற்றும் 18-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் பெய்த கனமழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தையே மழை புரட்டி போட்டது. ஏரல் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்றளவும் தண்ணீர் வடியாமல் உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு அரசு மற்றும் தன்னார்வலர்கள் பலரும் உதவி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து தமிழ்நாடு அரசுடன் பிரதமர் அலுவலகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து மத்திய குழு வந்து ஆய்வு செய்தது குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ள சேதங்கள் குறித்து மதிப்பிட, பல்வேறு துறை சார்ந்த குழு வருகை குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் மீட்பு பணிக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் தேவை குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.







